எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேசமயம் வரவு செலவுத் திட்ட உரையின்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை 2015 இல் பொதுத்துறையினருக்கான சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அழைப்பை ஏற்று அவர்கள் வரவுள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் இதன்போது கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.