நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை பிஞ்சை பயன்படுத்தி வயிற்று வலிஇ கடுப்பினை சரிசெய்யும் மருந்து தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.

நமது வீட்டு தோட்டத்தில் பயிரிடுகின்ற கீரைகளில் ஒன்று மணத்தக்காளி. இதன் காய், பழம், கீரை ஆகியன உடலுக்கு மருந்தாக அமைகின்றன. நார்சத்துக்கள் நிறைந்த இக்கீரைக்கு வயிற்று புண் மற்றும் வாய் புண்களை சரிசெய்யும் தன்மை உள்ளது. பழுத்த மணத்தக்காளியை மென்று சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு வாய்புண்களை விரைந்து குணப்படுத்துகிறது.

இந்த கீரை ஈரலை பலப்படுத்துகிறது. உடல் கழிச்சலை சீராக்குகிறது. வாந்தியை நிறுத்தும் தன்மை உள்ளது. நோயாளிகளின் உடலுக்கு உடனடி பலம் தருகிறது. ரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகிறது. இத்தகைய நன்மைகள் கொண்ட மணத்தக்காளியை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை தணித்து வயிற்று புண்களை ஆற்றும் சூப் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, வேகவைத்த பாசிப்பருப்பு, பூண்டு, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, உப்பு.
செய்முறை: வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி, நசுக்கிய பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த கீரையை சேர்க்கவும். கீரை மசிந்தவுடன் சிறிது மஞ்சள், உப்பு மற்றும் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் வேகவைத்து மசித்த பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு மிளகு பொடி சேர்த்து சூப் பதத்தில் இறக்கவும். இதை சாப்பிட்டுவர ஈரல் பலப்படும். உடல் உஷ்ணம் தணிந்து புண்கள் ஆறும். வயிற்று கடுப்பை சீராக்கும் மாதுளம் பிஞ்சு துவையல் செய்யலாம்.

மாதுளம் பிஞ்சு துவையல்

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்,
உளுந்தம்பருப்பு,
பூண்டு,
வரமிளகாய்,
மாதுளம் பிஞ்சு பொடி,
தேங்காய் துருவல்,
தனியா.

செய்முறை:

வானலியில் நல்லெண்ணெய் விட்டு சிறிது உளுந்தம்பருப்பு, நசுக்கிய பூண்டு, வரமிளகாய் மாதுளம்பிஞ்சு பொடி, தேங்காய் துருவல், தனியா சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். பின் இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளித்து எடுக்கும்போது, சுவை மிகுதியாக இருக்கும். இதனை உணவுடன் சாப்பிடுவதால் வயிற்று கடுப்பு தொடர்பான பிரச்னைகள் நீங்கும். மாதுளை காய், பழம், பிஞ்சு என அனைத்து பாகங்களுமே மருந்தாகிறது. மாதுளம் பிஞ்சுக்கு நீர்த்த ரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. சீதள நோய், நீர்கழிச்சல், திடக்கழிச்சலை போக்கக்கூடியது. இது எலும்புகளுக்கு நல்ல பலம் தருகிறது. வீக்கத்தை போக்கக்கூடியது. மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தோல், முடி ஆகியவற்றின் பராமரிப்புக்கு மாதுளை சாறு மிகுந்த பலனளிக்கிறது.