தூரத்திலிருந்து பார்க்கும்போது திறக்கப்பட்ட ஒரு புத்தகம் போன்ற தோற்றமளிக்கும் வாசிகசாலையானது டுபாயின் விதம் விதமான கட்டட பொக்கிஷங்களில் புதியதாகச் சேர்ந்திருக்கிறது. ஏழு மாடிக் கட்டடமான அது அறிவு ஞானத்துக்கு புத்துணர்வைக் கொடுக்கும் படைப்புகளால் நிரம்பியிருக்கும் முஹம்மது பின் ரஷீத் வாசிகசாலையாகும்.

1 பில்லியன் Dhs செலவில், ஏழு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் ஒன்பது நூலகங்கள், ஒரு ஆம்பிதியேட்டர், தோட்டம் மற்றும் இரண்டு தளங்களில் ஒரு கஃபே ஆகியவை உள்ளன.

பலரையும் வெவ்வேறு காரணங்களுக்காக ஈர்க்கும் Creek at Al Jaddaf; பகுதியில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் முஹம்மது அல் ரஷீத் வாசிகசாலை டுபாயின் மன்னரான முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருக்கிறது. 11 லட்சம் புத்தகங்கள், 60 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள், 73,000 இசைக் குறிப்புக்கள், 13,000 கட்டுரைகள், 325 வருடங்கள் வரை பழமையான 500 க்கும் குறையாத கையெழுத்துப் பிரதிகள், 75, 000 வீடியோக்கள் மற்றும் 35,000 தினசரிகளும், சஞ்சிகைகளும் கொண்டிருக்கும் அந்த வாசிகசாலை இன்று வியாழனன்று பொது மக்களுக்காகத் திறக்கபட்டது.

அந்த வாசிகசாலையில் டிஜிடல் முறையிலான வெளியீடுகளும் கிடைக்கும். அங்கே வருபவர்கள் தேடும் படைப்புக்களைக் கண்டுபிடிக்க உதவ செயற்கை அறிவூட்டப்பட்ட இயந்திர மனிதர்கள் உதவிசெய்வார்கள் என்பது ஒரு நவீனத்துவமாக இருக்கும்.