ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள – சுற்றுலா பயணிகள் மூவர், ரயில் ஆசன பதவில் மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த மொரிஸ் மெலெக் லீசா, மாரியா போடன், ஜானா எம்மெல்மன் ஆகிய மூவரும் (ஒரு ஆண், இரு பெண்கள்) சுற்றுலா பயணிகளாக கடந்த 17.06.2022 இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பில் இருந்து பதுளை, எல்லைக்கு சென்று அங்கு தங்கி – அங்குள்ள இடங்களை பார்வையிட்ட பின்பு கடந்த 27.06.2022 அன்று பதுளை, எல்லையில் இருந்து கண்டி செல்வதற்காக முகவர் ஒருவர் ஊடாக ரயில் டிக்கட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

குறித்த ரயில் டிக்கட்டுகளை பதிவு செய்து கொடுத்த தனியார் நிறுவனமானது, ஜேர்மன் பிரஜைகள் மூவரிடமும் கட்டணமாக 35 டொலர் அறவிட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தளவு அதிக தொகையை எவ்வாறு அறவிட்டார்கள் என்பது தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ரயில்வே கட்டணமாக இந்தளவு பாரிய தொகை அறவிட முடியாது. அப்படியே அறவிட்டிருந்தாலும் அந்த தனியார் நிறுவனம் அதனை சரியாக செய்திருக்க வேண்டும்.

குறித்த தனியார் நிறுவனம், எல்லையில் இருந்து கண்டிக்கு பதிவு செய்ய வேண்டிய ரயில்வே டிக்கட்டை எல்லையில் இருந்து நானுஒயாவிற்கு மாத்திரமே பதிவு செய்து கொடுத்துள்ளது.

அதனை சரியாக பார்க்காத ஜேர்மன் பிரஜைகள் மூவரும் தங்களுக்கு கண்டிக்கான டிக்கட் இருப்பதாக நினைத்து குறித்த தினத்தில் (27.06.2022) அன்று காலையில் பதுளையில் இருந்து புறப்படும் 5.55 மணி புகையிரதத்தில் எல்லை ரயில்வே நிலையத்தில் இருந்து முதலாம் வகுப்பில் தங்களுடைய பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

ரயிலில்வே திணைக்கள டிக்கட் பரிசோதகர்கள் இடையில் இவர்களுடைய டிக்கட்டுகளை பரிசோதனை செய்தபோது இவர்களுக்கு நானுஒயா வரை மாத்திரமே டிக்கட் இருப்பதாக ஜெர்மனியை பிரஜைகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கேள்வியுற்ற ஜேர்மன் பிரஜைகள் மூவரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் தங்களுக்கு கண்டி வரை பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் தாங்கள் மேலதிக பணத்தை கண்டி ரயில்வே நிலையத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்ததுடன், தங்களுக்கு ரயில்வே டிக்கட்டுகளை பதிவு செய்து கொடுத்த நிறுவனம் அவர்களுடைய தொலைபேசிக்கு அனுப்பிய குருந்தகவலையும் டிக்கட் பரசோதகர்களிடம் காண்பித்துள்ளனர்.

விடயத்தை புரிந்து கொண்டு ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து அவர்களை – முதலாவது வகுப்பில் இருந்து இரண்டாவது வகுப்பிற்கு அழைத்து வந்து அங்கிருந்து கண்டி வரை பயணம் செய்யுமாறு பணித்துள்ளனர்.

ஜெர்மனிய பிரஜைகள் மூவரும் வேறு வழயில்லாமல் இரண்டாவது வகுப்பில் ஆசனம் இல்லாமல் நின்று கொண்டே கண்டிவரை பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் விடயத்தை தெரிந்து கொண்ட ஆசனங்களில் இருந்தவர்கள் ஜேர்மன் பெண்கள் இருவருக்கும் ஆசனங்களை வழங்கியுள்ளனர்.

ஜேர்மனிய பிரஜைகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிய நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக  ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் அது முடியாமல் போயுள்ளது. இதன்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட ரயில்வே திணைக்களத்தின் துசார தலைமையிலான குழுவினரை பாராட்ட வேண்டும்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையில் எமது நாட்டிற்கு உல்லாச பிரயாணிகள் வருகை தருவதே பாரிய ஒரு விடயமாகும். அப்படி வருகின்றவர்களையும் இவ்வாறு ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே உல்லாசத்துறையை பாதுகாத்து கொள்ள வேண்டியது எங்கள் அனைவருடைய கடமையாகும்.

இந்த தனியார் நிறுவனம் தொடர்பாக உல்லாசத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுத் தர முடியும். தகவல்கள் அனைத்தும் எங்களிடம் இருக்கின்றது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு