பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும் நாளைய தினம் (9) லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு காலியில் எரிபொருள் வரிசையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தையடுத்து எரிபொருள் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகம் செய்து வருகின்றது.

எனினும், IOC மாத்திரமே தற்போது தனியார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது