நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் அதனை மேலும் உக்கிரமடைய செய்வதாகவே அமைந்துள்ளது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் ஐந்து விடயங்களை வைத்தே ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு பாராளுமன்றத்தில் உள்ள 225பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி, எரிபொருள் தொடர்பான ஊழல் மோசடி, 2019ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல் மற்றும் தேர்தல் ஆகியவையே அவை என்றும் சுட்டிக் காட்டிய அமைச்சர், 225பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, கத்தோலிக்க சமூகத்தினரின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் தரப்பினருடன் எதிர்க்கட்சி தலைவர் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் தலைவர் தோல்வியடைந்துள்ளார் என்பதற்காக நாடு தோல்வியடைய இடமளிக்க முடியாது என்பதற்காகவே மூன்று மாத கால அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை தாம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு எதிர்தரப்பினர் ஒத்துழைப்புக்களை வழங்காமல் குறுகிய அரசியல்நோக்கத்துடன் செயற்படுவது வெறுக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டின் தற்போதைய நிலைமையில் 225பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாமென மக்கள் எதிர்ப்பில் ஈடுபடுவது நியாயமற்றது. மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் எதிர்தரப்பினரின் செயற்பாடுகள் நாட்டை மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையிலேய அமைந்துள்ளது.

தாம் தூய்மையானவர்கள் என காட்டிக் கொள்ள எதிர்தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அதில் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படுவது நியாயமற்றது. சஜித் பிரேமதாஸ தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கத்தோலிக்க சமூகத்தினரது பிரதான குற்றவாளியாக கருதப்படும் நபருடன், திருமண பந்தத்தில் இணைய முற்படும் போது அந்த 52நாள் அரசியல் டீல் தொடர்பான சந்தேகம் எழுவது நிச்சயம்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்றாலும் நிலைமைகள் மாற்றமடையப்போவதில்லை.

அவ்வாறானால் ஐக்கிய மக்கள் சக்தியினர் மக்கள் விடுதலை முன்னணியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துக் கொண்டு 113 என்ற பெரும்பான்மை பலத்தை நிரூபித்து அரசாங்கத்தை பெற்றுக்கொள்ளலாமே என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.