தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்ச பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் இராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கோத்தபய ராஜ்பக்ச வெளிநாட்டு தப்பித்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக பல்வேறு நாடுகளிடம் கோத்தபய சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அமீரகம் மட்டுமே அவரது வருகையை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறுபுறம் பதவி விலகல் தொடர்பான தனது முடிவை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அதில் ‘மக்களின் நலன் கருதி  அனைத்து கட்சிகள் கொண்ட அரசைக் கொண்டுவர முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.