பிரதமர் பதவியில் இருக்கும் தினேஷ் குணவர்தனவின் பதவியும் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கமையஇன்னும் இரண்டு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

தற்போது இடைக்கால அமைச்சரவையொன்று செயற்பட்டு வருவதுடன், சர்வ கட்சி அரசாங்கம் அமைந்ததும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் சஜித் பிரேமதாச அல்லது அக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அப்படியானால், தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் தினேஷ் குணவர்தனவின் பதவியும் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.