ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வுக் குழுக்களை அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி புலனாய்வு சேவை, குடிவரவுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கடத்தலில் ஈடுபட்ட முகவர்கள், தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள், குடிவரவு அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பெண் தொழிலாளிகளாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஏராளமானோர் அந்நாடுகளில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஓமானில் உள்ள ஒரு வீட்டில் அழுத்தம் தாங்க முடியாமல் சுயநினைவை இழந்த ஒன்பது பெண்கள் இருப்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.