இயக்குனர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆண் இயக்குனர்களை விட, சுதா கொங்கரா ஒரு பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து, தான் இயக்கிய 2 தமிழ் திரைப்படங்களையும் தேசிய விருது வரை அழைத்து சென்று பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தவர்.

நடிகர் மாதவன் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான இறுதிசுற்று திரைப்படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதை வாங்கும் அளவிற்கு சுதா கொங்கரா அப்படத்தை இயக்கியிருப்பார்.பின்னர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 2020ஆம் ஆண்டு ஓடிடியில் ரிலீசான சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி கிட்டத்தட்ட ஐந்து தேசிய விருதுகளை அள்ளி குவித்தார்.

68 வது தேசிய விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த தயாரிப்பாளர் விருது ஜோதிகாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்காராவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணாவிற்கும் வழங்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக சுதா கொங்கரா அண்மையில் ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாக உள்ளார் என பல செய்திகள் உலா வந்த நிலையில்,மீண்டும் சூர்யாவை வைத்து சுதா கொங்கரா தனது புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது சுதா கொங்கரா,பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் சூரரைப்போற்று திரைப்படத்தை ரீமேக் செய்து இயக்கி வரும் நிலையில், நடிகர் சூர்யா உடனான அடுத்த திரைப்படம், 2023 மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்பட படப்பிடிப்பிலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று திரைப்படத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.