22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அரசாங்கத்துக்கு சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் சதஹம் யாத்திரை நிகழ்ச்சித் திட்டத்தின் நாவலப்பிட்டி தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் காலத்தை இரண்டரை வருடங்களாக்கியமை, இரட்டை குடியுரிமையை நீக்குதல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகிய காரணங்களுக்காகவே, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு தமது கட்சி ஆதரவு வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.க்கள் இல்லை என்று தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.க்கள் இருந்தால் அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அந்நியச் செலாவணியைப் பெறுவதற்காக இந்நாட்டில் கஞ்சா பயிர்ச்செய்களை நடைமுறைப்படுத்துவது இந்நாட்டின் கலாச்சாரத்துக்குப் பொருந்தாது என்றும் அவர் குறிப்பட்டார்.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் செயற்பாடு குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு உடன்பாடில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.