கழிவறையில் கிடந்த 4 வயது சிறுமியின் சடலம்: அரக்கர்களுக்கு தண்டனை அறிவிப்பு!தமிழகத்தை உலுக்கிய 4 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று மர்மமான முறையில் வீட்டின் கழிவறையில் உள்ள வாளியில், சாக்கு பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த பொலிசாரின் விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு, கழிப்பறையில் வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியின் பெரியப்பாவும் முன்னாள் ராணுவ வீரருமான மீனாட்சி சுந்தரம் (64) மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் (63) ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் சிறுமியின் ஒரு காதணி மீனாட்சி சுந்தரத்தின் படுக்கை அறையிலும், இந்த படுக்கையில் இருந்த பஞ்சு தூசுகள் சிறுமியின் உடலில் ஆங்காங்கே இருந்ததும் விசாரணையின் மையப்புள்ளியாக அமைந்தது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் மற்றும் ராஜம்மாள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பளித்தார்.

மேலும் சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோடு குற்றவாளிகளுக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.