கட்டார் தலைநகர் தோஹாவில் இதுவரை தங்க வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை அந்த நாடு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. குறித்த குடியிருப்பு வளாகங்களில் இனி, கால்பந்து விழாவைக் காணவரும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தங்கவைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாரில் எதிர்வரும் நவம்பர் 20 திகதி முதல் கால்பந்து உலகக் கிண்ணம் போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் பொருட்டு, உலகெங்கிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கட்டாரில் திரள வாய்ப்புள்ளது.

இந்த நிலையிலேயே தலைநகர் தோஹாவில் ஒரு டசினுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து தொழிலாளர்களை கட்டார் நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.

இதனால் ஆசிய, ஆப்பிரிக்க தொழிலாளர்கள் அதுவரை தங்கியிருந்த குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தோஹாவின் Al Mansoura மாவட்டத்தில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்த 1,200 தொழிலாளர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிலருக்கு தங்கள் உடமைகளை கைப்பற்றவும் போதிய நேரம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. வெளியேற்றப்பட்டுள்ள தொழிலாளர்கள் பலரும், இனி எங்கே செல்வது என புரியவில்லை எனவும் கூறியுள்ள நிலையில், வெளியேற்றப்பட்டுள்ள அனைவருக்கும் பாதுகாப்பான உரிய தங்கும் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள மூன்று மில்லியன் கட்டார் மக்கள் தொகையில் 85% பேர்கள் வெளிநாட்டு ஊழியர்கள். தற்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் சாரதிகள், தினக்கூலி தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்த ஊழியர்கள் என்றே கூறப்படுகிறது.