மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

என்னை அன்புடன் வரவேற்ற சகோதர அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு நன்றிகள். நான் விருந்தாளி அல்ல. உங்களில் ஒருவன். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். நான் இங்கு வந்தது குறித்து பலருக்கு பலவித உணர்வுகள் இருக்கலாம். ஆனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம். அதற்கான ஆரம்பமே இது.

வெறுப்பையும் எதிர்ப்பையும் வைத்து அரசியல் செய்ய முடியாது. நீடிக்கவும் முடியாது என்பது எனது சிறிய அரசியல் வாழ்வில் நான் படித்த அனுபவம். அன்பாலும், ஒன்றிணைவாலுமே எல்லாம் சாத்தியப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டி. தந்தை ஸ்தானத்தில் இருந்து என்னை வழிநடத்துகின்றார். திகாம்பரமும் எனது மூத்த சகோதரன் போன்றவர் என்றார்.