பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 90களில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பரத் கல்யாண். பாட்டாளி, சுள்ளான் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போதும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது மனைவி பிரியா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 43 வயதான பிரியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கோமாவில் இருந்த அவர் இன்று அதிகாலை இறந்ததாகவும் பரத் கல்யாணின் நண்பர் ரிஷி தெரிவித்துள்ளார்.

பரத் கல்யாண் – பிரியா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு பரத் கல்யாண் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து பிரியா தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பரத் கல்யாணின் மனைவியின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் பரத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.