வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள இடையூறுகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இன்று (02) காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.v வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்யவேண்டும் எனின், அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் வலிதான பாதுகாப்பு அறிக்கையை பதிவாளர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தைக் கொண்டே திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்று கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

இதற்கு சுமார் 2 வாரங்கள் தேவைப்படுகின்ற நிலையில், வெளிநாட்டவர் மற்றும் இலங்கையருக்கு இடையிலான திருமணங்களை நடத்துவதில் பல அசௌகரியங்களை தம்பதிகள் எதிர்கொண்டு வருகின்ற நிலையிலேயே பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.