சுமார் 7 கோடி ரூபா வரை பெறுமதி மிக்க பல்வேறு போதைப் பொருட்கள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் வைத்து, இவை கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் ( சட்டம்) சுதத்த சில்வா கூறினார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அஞ்சல் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்துக்கு இடமானது என தடுத்து வைத்த 13 பொதிகளில் இருந்து இவை கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து குறித்த அஞ்சல் பொதிகள் அனுப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தேகத்துக்கு இடமான பொதிகல், சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் உள்ளிட்டோர் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவற்றில் குஷ் எனும் போதைப் பொருள் 921 கிராமும், 106 கிராம் ஐஸ் போதைப் பொருளும், கஞ்சா விதைகளால் பெறப்படும் ஒரு லீட்டர் எண்ணெய், மெதம்பிட்டமைன் எனும் 5272 போதை மாத்திரைகள், போதை முத்திரை 425 பகுதிகள், மேன்ட் 2 கிராம், ஹஷீஸ் 4 கிராம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மொத்த பெறுமதி 7 கோடியே 30 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா என மதிப்பீடு செய்யப்ப்ட்டுள்ளது.

இந் நிலையில் ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், கைப்பற்றப்ப்ட்ட போதைப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.