கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் , படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணம் அவர்கள் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மியன்மார் (பர்மா) நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட அந்தக் கப்பல் கடந்த 6 ஆம் திகதி தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டது.

கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். தகவவலறிந்து சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ (Helios Leader) என்ற சரக்குக் கப்பல் உடனடியாக இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டு 40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையகள் பலர் சட்டவிரோதமாக ஆபத்தான பயணங்கள் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.