11 Nov 2022 ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக திறைசேரியின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் இரண்டு கட்டங்களாக இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக திறைசேரி பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஓய்வூதிய பணிக்கொடைக்காக ஏராளமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் எஞ்சிய காலப்பகுதி வரை கொடுப்பனவுகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களில் நீண்டகாலமாக சேவையாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவித்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.