இப்போதெல்லாம் தமிழில் மிக நீளமான படங்களை ஆடியன்ஸ் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு படத்தின் அதிகபட்ச நீளமே தற்போது அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஒரு திரைப்படம் ஓடுகிறது என்றால் பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டி விடுகிறது.

இதனால் இப்படிப்பட்ட போர் அடிக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் ரசிப்பது கிடையாது. ஆனால் அந்த காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது. ஒரு திரைப்படத்தின் நீளமே குறைந்தபட்சம் 3 மணி நேரம் இருக்கும். அதிலும் ஏகப்பட்ட பாட்டுக்கள் இருக்கும். அதை அந்த கால மக்கள் ரொம்பவே ரசித்துப் பார்த்தார்கள்.

அந்த வகையில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் தான் இன்று வரை மிகவும் நீளமான திரைப்படமாக இருக்கிறது. இதுவரை அந்த படத்தின் சாதனையை வேறு எந்த திரைப்படமும் முறியடித்தது கிடையாது. எம்ஜிஆர் இயக்கி, தயாரித்து, நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் தான் அது.

அப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் வீரப்பா, எம் என் நம்பியார், பானுமதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். மிகப்பெரும் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் வசூலிலும் பல சாதனை படைத்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கை நிறைய வசூலை அள்ளியது. அதுவரை சிவாஜி படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ரசிகர்கள் இந்த படத்தால் எம்ஜிஆரின் பக்கம் சாய ஆரம்பித்தனர்.

அப்போதைய கால சினிமாவை எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் தான் ஆட்சி செய்தனர். அதில் நடிகர் திலகம் சிவாஜிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் எம்ஜிஆர் தன்னுடைய சொந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களையும் தன் பக்கம் வரவழைத்தார். அப்படி பலராலும் ரசிக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும்படி எடுக்கப்பட்டிருந்தது.

அப்போது வந்த திரைப்படங்களிலேயே அதிக நேரம் ஓடக்கூடிய திரைப்படமாகவும் இது இருந்தது அவ்வளவு ஏன் இந்த திரைப்பட சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. அந்த வகையில் எம்ஜிஆரின் இந்த நாடோடி மன்னன் திரைப்படம் தான் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நீளம் கொண்ட திரைப்படமாக இப்போது வரை இருக்கிறது.