அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பி 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதனைக் கையளிக்கும் நிகழ்வு, நேற்று மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.