இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ஏஐ-இசிடிஏ) என்கிற வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. இந்தியாவில், இத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஏஐ-இசிடிஏ ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதனை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் டுவிட்டரில் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. நமது ஆழமான நட்பின் விளைவாக, இது எங்கள் வர்த்தக உறவுகளின் முழு திறனை அடைவதற்கும், பெரிய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் வழி வகுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.