அமெரிக்காவில் பெய்து வரும் வரலாறு காணாத பனி பொழிவால் ஜனாதிபதி ஜோ பைடன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் உலக நாடுகள் பலவும் சுனாமி, நிலநடுக்கம், அதிகமான மழை, பயங்கர புயல், மற்றும் பனி பொழிவு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த சர்வதேச அமைப்புகள் மற்றும் உலகளாவிய நாடுகள் அனைத்தும் தீவிர ஆலோசனை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்கள் இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமான பனி பொழிவால் பாதிப்படைந்துள்ளனர்.

பலத்த காற்றுடன் அதிகமான பனி பொழிவு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிக முக்கிய மாகாணமான நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 180 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்த அதிகப்படியான பனி பொழிவால் நகரில் போக்குவரத்து பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தீவிர பனிப்பொழிவை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூயார்க் நகர மேயர் ஹோசல் தெரிவித்த தகவலில், எங்கள் கோரிக்கையை ஏற்று அவசர பிரகடனத்தை அறிவித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குழுவினர்கள் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.