லங்கா கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 420 ரூபாவாக இருந்த ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 365 ரூபாவில் இருந்து 355 ரூபாவாகவும் குறைவடையும்.

எவ்வாறாயினும், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானத்தை விட நேற்றிரவு முதல் ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினால் குறைக்க சிலோன் இந்தியன் ஒயில் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ​​ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படி கடந்த காலத்தில் டீசலின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தமது நிறுவனத்தின் பரிந்துரைகள் இன்று போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருள் விலை திருத்தத்துடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? என்பது நாளை அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.