இலங்கையின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 வயது யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

மேலும், இதுவரை குறித்த வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்குள்ளான 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பதுளை பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கயான் குரே தெரிவித்துள்ளார்.

பதுளை – கைலகொட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுவதி உயிரிழந்த பிரதேசத்தில் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் குறித்த பிரதேசத்தில் எவ்வித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு எலிக்காய்ச்சலுக்கு உள்ளான 50 வயதான ஒருவர் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மேலும் பலர் இங்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.