இனப் பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற பேச்சு சம்பந்தமாக விஷமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில்

கொண்டுசெல்லப்படுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள அதிபர் ரணில் நடவடிக்கை எடுப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.

சகல தரப்புகளும் இணங்கும் சிறந்த தீர்வை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கான முயற்சியை அதிபர் உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்.பி, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

“எனினும், அது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டதாக காணப்படுகின்றன.

“அந்த வகையில் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினை தீர்வுக்கான சாத்தியப்பாட்டையும் குழப்ப முயற்சிக்கும் விடயமாக இதை உணர முடிகிறது. அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதில் முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.