தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி.கமல்ஹாசனுடன் தேவர் மகன், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் கமல்ஹாசனின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனுடனான நட்பை முறித்து கொண்ட கவுதமி, சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை. இந்தநிலையில் நடிகை கவுதமி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அது பற்றி இனி பேசவேண்டாம்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்களான வாஜ்பாய், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தேன்.

திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழகத்தில் அந்த கட்சிகளில்தான் சேரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும்.

ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும் போது இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் பிரியுமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி பிரிந்தால் அது அ.தி.மு.க.- பாரதீய ஜனதா கூட்டணிக்கு தான் சாதகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.