தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினோம். அதில் முடிவு காணவில்லை. இனி அரசியல் ரீதியாக அதனை பெறவேண்டும் .!

எமது கட்சி பலமான கட்சியாக வளர்ந்து வருகின்றது. எமக்குள் பிரதேச வாதம் இல்லை. அம்பாறை திருகோணமலை வன்னி ஆகிய பகுதிகளிலும் எமது கட்சி அமைப்பாளர்களை நியமிக்கவுள்ளோம். அத்துடன் தமிழன் எங்கு தான் வாழ்கின்றானோ அவனுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மட்டு அம்பாறை விசேட அமைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களுக்கான கட்சி நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் எனக்கு ஒரு தகவல் வந்தது. அம்மானை சந்திக்க வேண்டும் என ஒருவர் கேட்டிருக்கின்றார். அம்மானிடம் போவதென்றால் சும்மா போவது கடினம், ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டும் என ஒருவர் கூறியிருக்கின்றார். அதுவும் ஆட்டோவிலும் போகமுடியாது காரில் வந்தால் மாத்திரமே கூட்டிச்செல்வதாகவும் கூறியுள்ளார்.

அதிலும் பெற்றோலுக்கு 10 ஆயிரம் ரூபா முற்பணமாகவும் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி கூறியமையால் மக்கள் என்ன நினைப்பார்கள். இன்று வேலைவாய்ப்பிற்காக காசு வாங்குகின்றார்கள். அவர்களை பொலிஸில் ஒப்படைக்க சொல்லி நானே கூறியுள்ளேன். நமக்கு அந்த காசு வாங்கும் கொள்கை இல்லை. எமது கட்சியை வளர்த்து செல்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினோம். அதில் முடிவு காணவில்லை. இனி அரசியல் ரீதியாக அதனை பெறவேண்டும் என்பதற்காக தற்போது கட்சியை ஆரம்பித்து திறம்பட மேற்கொண்டுள்ளோம். அந்த அடிப்படையில் எமக்காக உலகம் முழுவதும் எத்தனை பேர் சிரமப்படுகின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நான் நிற்கின்ற போது வெளிநாட்டில் உள்ள அத்தனை நல்லுள்ளங்களும் நிதிகளை வழங்கினார்கள்.

உண்மையில் அவர்களை மறக்க முடியாது. முகநூலில் எமக்காக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் அம்பாறை மாவட்ட மக்கள். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலுக்கான சகல விடயங்களும் முடிவுறும் நிலையில் அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பாளருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.