ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து ஆப்கான் செய்தி தொடர்பாளர் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக அன்றே பெண்கள் சாட்டையால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி வீழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பலர் ஆப்கானில் இருந்து தப்பித்து பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்து உள்ளனர். ஆனால் அங்குள்ள தலீபான்கள் அவர்களைத் தடுக்கவே குழந்தைகளையாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்தில் தாய்மார்கள் குழந்தைகளை முள்வேலிக்கு மேலாக வீசியுள்ளனர். அந்த குழந்தைகளை விமான நிலையத்துக்குள் நிற்கும் பிரித்தானியா ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர்.

சில குழந்தைகளோ முள் வேலியை தாண்டி விழுந்துள்ளன. பல குழந்தைகள் முள்வேலிக்குள் விழுந்ததால் கதறி அழுதன. இந்த காட்சியை கண்ட அனைத்து பிரித்தானியா படை வீரர்களும் கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் தலீபான்கள் ஜலாலாபாத் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.