பங்களாதேஷ் விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது அதன் விமானிகளில் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிமன் பங்க்ளாதேஷ் விமானசேவைக்கு சொந்தமான குறித்த விமானம் இந்திய எல்லைக்குள், அராய்பூர் அருகே பயணித்துக்கொண்டிருந்தபோது அதன் விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி, மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்போது, அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டுத்தளத்துக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நோயாளர் காவு வண்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த விமானம் எவ்வித அசம்பாவிதங்ளுமின்றி பாதுகாப்பாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து, சுகயீனமடைந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உரிய நேரத்தில் விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகள் உயிர் தப்பினர். பின்னர், சுகயீனமடைந்த விமானிக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து அவருடன் குறித்த விமானம் டாக்கா நோக்கி பயணமானது.