நாட்டில் தொடர்ச்சியாக முடக்க நிலையை அமுல்படுத்துவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு நூறு வீதம் உள்ளது. டெல்டா வைரஸ் பிறழ்வடைந்து மேலும் ஒரு திரிபு தற்போது கொழும்பில் பரவிக் கொண்டிருக்கின்றது.

இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வு கூறலின் படி, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிவரை நாட்டில் முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 7,500 உயிர்களைப் பாதுகாக்க முடியும்.

அத்துடன், அக்டோபர் 3ஆம் திகதிவரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அந்த அறிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது. ஏனெனில், பெரும்பாலான இடங்களில் மக்கள் ஒன்றுகூடி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், மிகவும் பொறுப்புடனான செயற்பாட்டின்மூலம் மாத்திரம் தற்போதைய சந்தர்ப்பத்தில் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். இல்லாவிட்டால், நாட்டில் தொடர்ச்சியாக முடக்க நிலையை அமுலாக்குவதை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு நகரில் நூற்றுக்கு நூறு வீதம் பரவுவது டெல்டா திரிபாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேநேரம், நாட்டின் ஏனைய பாகங்களில் அல்பா திரிபை காட்டிலும், டெல்டா திரிபு பரவுவதாகவும் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நீலிகா மளவிகே, கலாநிதி சந்திம ஜீவந்தர ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.