காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகளினால் சேதமாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை தம்மால் பழுதுபார்த்து மீண்டும் இயக்க முடியும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் வெளியேறின. இதன்போது காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் எண்ணிக்கையான வான்கலங்கள் மற்றும் இராணுவ வாகனங்களை அமெரிக்கப் படையினர் விட்டுச் சென்றிருந்த நிலையில் அவை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

73 வான்கலங்கள், 70 கவசவாகனங்கள், 27 ஹம்வீ ரக இராணுவ வாகனங்களை அமெரிக்கப் படையினர் செயலிழக்கச் செய்துள்னர் எனவும், அவை மீண்டும் ஒரு போதும் பறக்கமாட்டா, அவை எவராலும் மீண்டும் ஒரு போதும் இயக்கப்பட முடியாது என அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தலைவரான ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி தெரிவித்தார்.

இந்த நிலையில் , அவற்றை தம்மால் செப்பனிட்டு மீண்டும் இயக்க முடியும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான் தலைவர்களில் ஒருவரான அனஸ் ஹக்கானி (Anas Haqqani)இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இவ்விமான நிலையத்தில் உள்ளவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானவையாகும். இவற்றை எமது பொறியியலாளர்கள் செப்பனிட்டு, மீண்டும் செயற்பட வைக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.