20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என அறிவித்துள்ளனர்.

தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஓர் அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம்.

அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.