அமைச்சுகளில் குறைக்கக்கூடிய செலவீனங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
 
குறைக்கக்கூடிய செலவீனங்கள் மற்றும் மீதப்படுத்த எதிர்பார்க்கப்படும் நிதி தொடர்பிலும் திறைசேரிக்கு கூடிய விரைவில் அறிவிக்குமாறு நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

COVID-19 பெருந்தொற்று காரணமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நிலைமையின் மத்தியில் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதால், செலவீனங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது ஆரம்பிக்க முடியாத வேலைத்திட்டங்கள், அமைச்சுகளின் புதிய கொள்வனவுகள், கட்டட நிர்மாணங்கள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சமீபத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அரசாங்கத்தின் செலவீனங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சரினால் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டது.