2022 க்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் வரிக்கொள்கையில் விரிவான மாற்றங்கள் கொண்டுவரப்படவிருப்பதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அரசாங்கத் தரப்பு பா.உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக செப்டம்பர் 22ம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தின்போது இது சம்பந்தமாக கூறியுள்ளார். தனது வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்நாட்டு உற்பத்தியாளனை ஊக்கப்படுத்தும் மற்றும் வறிய மக்கள் மீது சுமையேற்றாத வரிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அதன் போது கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, இதுவரை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள அந்நியச் செலவானி தட்டுப்பாடு சம்பந்தமாகவும், கடன் நெருக்கடி சம்பந்தமாகவும் தீர்வு முன்வைக்கப்படுமென கருதப்படுகிறது. விசேடமாக, இதுவரை சீனாவின் நிதி வசதிகள், கடன் மற்றும் நிதியுதவிகள் மீது முன்னெடுக்கப்ட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் செயல்திட்டமொன்றுக்கு செல்ல அரசாங்கம் கவனம் செலுத்துமென பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் பெறல் போன்ற கருத்துக்கள் இதன்போது பயனீட்டுக்கு எடுக்கப்படக் கூடுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.