நாட்டில் தற்போது மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தலைமைத்துவம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு மாத்திரம் உள்ளது.

அதற்கான அறிவு, அனுபவம், திறமை, சர்வேச நாடுகளுடன் சிறந்த தொடர்புகள் என அனைத்தும் ஐ.தே.க. தலைமைத்துவத்துக்கு மாத்தரமே உள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இன்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இன்று முழு நாடும் நாசமாகியுள்ளது. சீமெந்து, பால் மா, சீனி என அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தக்காளி கிலோ ஒன்றின் விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரம், சமையல் எரிவாயு இல்லாது மக்கள் திண்டாடுகின்றனர். இவ்வாறு மக்கள் சகல வழிகளிலும் நசுக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் நாட்டில் மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தலைமைத்துவம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரம‍ே உள்ளது. எங்களை யாரும் தூக்கிப் பிடிக்கவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தம் இடவோ வர மாட்டார்கள்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் வேலைக்காகாது. நாங்கள் உழைத்தால் தான் எங்களால் சாப்பிட முடியும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆம். உண்மைதான்.

ஆனாலும், நாட்டில் பொதுமக்கள் சம்பாதிப்பதற்கான வழி வகைகளை உருவாக்கக் கூடிய அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும். அப்படி இல்லை எனில், யார் ஆட்சிக்கு வந்தாலும் வேலைக்காகாது.

இந்நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பைத்தியக்காரர்களுக்கு கொடுப்பதா? அல்லது அறிவு, அனுபவம், திறமை, சர்வேச நாடுகளுடன் சிறந்த தொடர்புகளை கொண்டுள்ளவர்களிடம் ஒப்படைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்றார்.