திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் திருகோணமலை சீனக்கூடா பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னால் இடம்பெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் தலைமையில் இன்று (10) நடைபெற்றுள்ளது.

இதில் ஐக்கிய மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையை இந்தியாவுக்கு விற்று விடாதே,மற்றும் காணிகளை மீளப்பெறு போன்ற வாசகங்களையும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பௌத்த தேரர்கள் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த 99 குதங்களில் 85 குதங்கள் இப்போது இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

“எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்யும் தேசத் துரோக ஒப்பந்தத்தை இரத்துச் செய்” உள்ளிட்ட விடயங்களைக் கூறி கோசங்களை எழுப்பியுள்ளனர்.