னவரி 11 அன்று, பி.ஐ.பி. என்னும் பத்திரிகைத் தகவல் மையம் (PIB-Press Information Bureau), ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை அனுசரிப்பது சம்பந்தமானதாகும். ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (Azadi ka Amrit Mahotsav) என அதற்குப் பெயரும் இட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடி வீர காவியம் படைத்திட்ட இந்திய மக்களின் வரலாற்றைத் திரித்து எழுதுவதற்காகவே மோடி அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருக்கிறது என்பது தெளிவாகும்.

இந்த அறிவிப்பில், “இந்திய விடுதலை இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் மட்டும் வரையறுக்கப்பட்டுவிடவில்லை, மாறாக அது அதற்கும் முன்பாகவே நாட்டின் அடிமைத்தனத்தின் காலகட்டத்தையும் கடந்திருக்கிறது,” (“the freedom movement is not limited only to British rule, even before that India has gone through a period of servitude”) என்று கூறுகிறது. இன்றைய தினம் நிறுவப்பட்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் பூகோள வரைபடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அழைத்ததுபோன்று பல்வேறு “மன்னர் சமஸ்தானங்களாக” (“princely states”) இருந்தது.

பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதில் வெற்றிபெற்ற விடுதலை இயக்கம், பின்னர், இந்தியாவில் இருந்துவந்த 650க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களை இந்திய ஒன்றியம் என்னும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது. அந்த அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபையால் இந்திய அரசமைப்புச்சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அரசமைப்புச்சட்டம் 1950இல் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக, இந்தியா என்னும் ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது, சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15க்குப்பின் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை வெற்றிகரமாகத் தோற்கடித்தபின்னர் ஒரு சுதந்திரமான நாடாக மாறியது.

இத்தகைய வீரகாவியம் படைத்திட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கோ மற்றும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடிகளுக்கோ எவ்விதப் பங்கும் கிடையாது. இப்போராட்டத்தில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த இந்திய மக்கள் தங்கள் மத பேதங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, சுதந்திரம் பெற்றிடவும், ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசை நிறுவியிருப்பது குறித்தும் அவர்களுக்கும் எவ்விதச்சம்பந்தமும் கிடையாது.

இப்போது ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முதல் யுத்தம், 1857 எழுச்சிக்கு, ஸ்வாமி விவேகானந்தரும், ரமண மகரிஷியும் உத்வேகம் ஊட்டினார்கள் என்று கூறுகிறது. ஸ்வாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டிலும், ரமண மகிரிஷி 1879ஆம் ஆண்டிலும் பிறந்தவர்களாவார்கள். இவர்கள் எப்படி இவர்கள் பிறப்பதற்கு முன்பே நடைபெற்ற 1857 கலகத்திற்கு உத்வேகம் ஊட்டினார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

1857 கலகம், இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் நடைபெற்றது. இதில் இந்துக்களும் முஸ்லீம்களும் பிரதானமான பங்களிப்பினைச் செய்தார்கள். ஜான்சி ராணி, லட்சுமிபாய் அவர்கள், தாண்டியா டோப் (Tantia Tope) மற்றும் இதர தலைவர்களுடன் இணைந்து, 1857இல் தில்லி செங்கோட்டையில் நின்றுகொண்டு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்றும், இனி சுதந்திரமான இறையாண்மையுடன் கூடிய இந்தியாவை மொகலாய அரசர், பகதூர் ஷா ஜஃபார் (Bahadur Shah Zafar) ஆட்சி புரிவார் என்றும் பிரகடனம் செய்தார்கள். பகதூர் ஷா ஜஃபார் அவர்களை ஆர்எஸ்எஸ் அகராதியானது, “பாபரின் சந்ததியைச் சேர்ந்தவர்” (“Babur ki Aulad”) எனக் கேலி செய்துள்ளது.

ஹரித்வாரில் நடைபெற்ற சாமியார்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தீயிட்டுக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது, சமூக ஊடகங்களில் முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து எண்ணற்ற அசிங்கமான ஆப்புகள் (nasty and obscene apps) வலம் வந்துகொண்டிருப்பது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 80 சதவீதத்தினரான இந்துக்களுக்கும், 20 சதவீதத்தினரான முஸ்லீம்களுக்கும் இடையேயான போராட்டம் என்று பிரகடனம் செய்திருப்பது (உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை சுமார் 19 சதவீதமாகும்) ஆகியவற்றை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.

ஒன்றிய மோடி அரசாங்கம் மேலே கண்டவாறு ஆபத்தான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கம் இப்போதுள்ள இந்தியக்குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தை மாற்றியமைத்திட விரும்புகிறார்கள் என்னும் நோக்கத்தைத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.

இவர்களின் சூழ்ச்சித்திட்டம் மிகவும் தெளிவானவையே. இவர்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள இப்போதைய மதச்சார்பற்ற-ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் “இந்துத்துவா ராஷ்ட்ரமாக” மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் சூழ்ச்சித்திட்டமாகும். இது, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய மக்களின் போராட்டத்திற்கு நேரெதிரான ஒன்றாகும்.

பிஐபி பத்திரிகைச் செய்தி மேலும், “இந்த அநாமதேய சுதந்திரப் போராளிகள் மீதான கவனத்தை மாற்றும் நோக்கத்துடன், அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கின்றன” (“With the purpose to shift the spotlight on these anonymous freedom fighters, Amrit Mahotsav celebrations have been started”) என்று கூறுகிறது. இதற்குப்பின் ஒளிந்துள்ள நிகழ்ச்சிநிரல் என்னவெனில், விடுதலைப் போராட்டக் காலத்தில் உண்மையில் பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவிய ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா பேர்வழிகளை, “வீராதிவீரர்கள்” எனக் காட்டுவதற்கான முயற்சிகளேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு மிகவும் அனுதாபம் காட்டக்கூடிய விதத்தில் புத்தகங்கள் எழுதியுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி. டாம்லே போன்றவர்கள்கூட (The Brotherhood in Saffron by Walter K Andersen and Shridhar D Damle, 1987, amongst others) விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் முற்றிலுமாக இல்லாமலிருந்த விவரங்களையும், அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பல்வேறு ஆதாயங்களைப் பெற்ற விவரங்களையும் அளித்திருக்கின்றனர்.

அவர்கள் தங்கள் புத்தகத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “உண்மையில், பம்பாய் உள்துறை, 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, சங் பரிவாரங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எவ்விதமான போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தன்னைப் பார்த்துக்கொண்டது. குறிப்பாக, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கலவரங்களின்போது எவ்விதப் பங்கும் மேற்கொள்ளாது தன்னைத் தவிர்த்துக்கொண்டது….” (ஆண்டர்சன் – டாம்லே எழுதிய புத்தகம், 1987, ப.44). “இந்துத்துவா ராஷ்ட்ரத்தை” நிறுவ வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு இருந்துவந்த அரிப்புதான், அதனை பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீச இட்டுச்சென்றது.

இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமானது பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவியது நன்கு நிறுவப்பட்டுள்ளபோதிலும், அது விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகளுக்கு எதிராக அவதூறுச் சேற்றை வாரி இறைத்திட எப்போதும் தயங்கியது இல்லை.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டினாலே போதுமானதாகும். அப்போது அவர், “கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்த ஆலைகளில் பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் நடந்தபின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டன் அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அதில் உள்ளவர்களில் பலர் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்று நிரூபணமாகியிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகப்,” பேசினார்.

இதைவிட வேறெதுவும் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா, என்ன? சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒருவரே, இந்திய நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாகப் பேசும்போது, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் “பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்களாகவே” இருந்தார்கள் என்று நேரடியாகவேப் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிய நம் பயணத்திற்குத் தடையாக இருந்திடும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் இத்தகைய ஆபத்தான நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

“இந்தியா, அதாவது பாரதத்திற்காக”, சுதந்திர இந்தியாவின் குணாம்சத்தை மாற்ற முயலும் இந்த மதவெறி சக்திகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

மூலம்: Distorting and Rewriting History of our Freedom Struggle
தமிழில்: ச.வீரமணி