தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன்மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும், ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பாலிகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷிய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.