உக்ரைன் தலைமைக்கு ரஷ்யா குறி வைத்துள்ளது. என்னை அழிக்க அது இலக்கு நிர்ணயித்துள்ளது என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
எனக்கு முதல் குறியும், எனது குடும்பத்துக்கு 2வது குறியும் வைத்துள்ளது ரஷ்யா என்று உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். என்னை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்த உக்ரைனையும் நிர்மூலமாக்கி விடலாம் என்று ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படு உக்கிரமாக போர் தொடுத்துள்ளது ரஷ்யா. திரும்பிய பக்கமெல்லாம் ரஷ்ய படைகள் உக்ரைனை பந்தாடி வருகின்றன. நாலாபுறமிருந்தும் தாக்குதல் நடப்பதால் உக்ரைன் தடுமாறிப் போய் நிற்கிறது. முதல் நாளிலேயே பல நகரங்களில் பல முக்கிய நிலைகளை அழித்து விட்டது ரஷ்யா. 2வது நாளாக இன்றும் தாக்குதல் உக்கிரமாக நடக்கிறது.
2ம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய கண்டத்தில் நடந்துள்ள மிகப் பெரிய போராக இது மாறியிருக்கிறது. தலைநகர் கீவை கைப்பற்றுவதே ரஷ்யாவின் முக்கிய இலக்காக உள்ளது. நேற்று கீவ் நகரின் வடக்கில் உள்ள முக்கியமான செர்னோபிலை ரஷ்யப் படையினர் கைப்பற்றினர். இங்கு செயலிழக்கப்பட்ட அணு உலை உள்ளது. செர்போனில் அணு உலை விபத்தை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. மேலும் பெராலஸ் தலைநகருக்குச் செல்லும் சாலையையும் ரஷ்யப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் பெலாரஸ் நாட்டில் நிலை கொண்டுள்ள ரஷ்யப்படையினர் உக்ரைனுக்குள் எளிதாக நுழைய வழி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், எதிரி (ரஷ்யா) என்னை முதல் குறியாக வைத்துள்ளது. எனது குடும்பத்தை 2வது இலக்காக வைத்துள்ளனர். என்னையும், எனது குடும்பத்தையும் அழிப்பதே அவர்களது நோக்கம். உக்ரைன் தலைமையை அழித்து விட்டால் மொத்த நாட்டையும் நிர்மூலமாக்கி விடலாம் என்பது அவர்களது எண்ணமாகும். அரசியல் ரீதியாக உக்ரைனை செயலிழக்க வைக்க அவர்கள் தீவிரமாக உள்ளனர்.
நான் தலைநகரில்தான் தொடர்ந்து தங்கியிருப்பேன். எனது குடும்பமும் உக்ரைனில்தான் இருக்கும் என்றார் ஜெலன்ஸ்கி.
ஆனால் ரஷ்ய மக்களைக் காப்பதற்காகவே இந்த போர் என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார். உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை தடுக்கவே இந்த போர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் அடிப்படையே இல்லாத புகார்களைக் கூறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய கண்டத்திலேயே ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய நாடு உக்ரைன்தான். நாலரை கோடி பேர் இந்த நாட்டில் வசித்து வருகின்றனர். சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு தனி நாடானது. சமீபத்தில் இது நேடோ அமைப்பில்சேர முயற்சித்து வந்தது. இதுதான் ரஷ்யாவை கொதிப்படைய வைத்து விட்டது.
உலக நாடுகளையெல்லாம் தனது படை பலத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் அமெரிக்கா, தனது வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து உட்கார எடுக்கும் முயற்சியாக இதை ரஷ்யா பார்க்க்கிறது. உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் ரஷ்யாவுக்கு மிகப் பெரிய பாதகம் ஏற்படும். அதாவது உக்ரைன் கடல் மார்க்கம் ரஷ்யாவுக்கு முக்கியமானது. நேட்டோ படை ரூபத்தில் அமெரிக்காவிடம் அதைப் பறி கொடுத்து விட்டால் தனது வர்த்தகம், பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று ரஷ்யா அஞ்சுகிறது. இதனால்தான் உக்ரைனை வெளுத்தெடுக்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து என்றால், அமெரிக்காவின் நண்பராக இருக்கப் போய் பேராபத்தை சம்பாதித்துள்ளது உக்ரைன் என்று பலரும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க எத்தனையோ நாடுகளை தனது எதிரியாக அதுவாக சித்தரித்துக் கொண்டு போய் தாக்கியுள்ளது, நிர்மூலமாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அதற்கு நல்ல உதாரணம். ஆப்கானிஸ்தான் இந்த அளவுக்கு அழிந்து போக முக்கியக் காரணமே அமெரிக்காவின் ராணுவம்தான். ஆனால் கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தானை கைவிட்டு விட்டு கிளம்பிப் போய் விட்டது.
ஆனால் ரஷ்யாவோ, தனது எல்லைப் பகுதியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மட்டுமே உக்ரைனை எச்சரித்தது, அதை உக்ரைன் மதிக்காத காரணத்தால்தான் இன்று படையெடுத்துள்ளது. ரஷ்யா செய்வது மிக மிக சரியான காரியமே என்று பல்வேறு அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எந்தப் போராக இருந்தாலும் அது அழிவுக்கே இட்டுச் செல்லும். அந்த வகையில் இந்த போரும் சர்வதேச அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். அமெரிக்கா உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதை விட்டு விட்டு அகல வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்