வவுனியாவில் இடம்பெற்று வரும் காணிப்பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவையில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்த நடமாடும் சேவை என்பது வரவேற்கத்தக்கவிடயம். ஆனால் எமது மக்கள் இந்த சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்தந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு சொல்லும் பதிலையே இப்போதும் சொல்லப்போகின்றார்கள். எனவே மக்கள் இதில் தீர்வைப்பெற்று கொள்ள முடியும் என்பதில் வாய்ப்பே இல்லை.
பலவருடமாக தீராதுள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்ற ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ள நிலையில், இந்த நடமாடும் சேவையினுடைய செயற்பாடு நல்லதாக இருக்கவில்லை என்பது எனது கருத்து. 

இந்த நடமாடும் சேவைகள் தொடர்ச்சியாக ஒரே தவறையே விட்டுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறுத்துவதென்றால் அமைச்சரவை ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். இந்தகாணி பிரச்சனையை நேரடியாக கையாளுகின்ற ஒரு வழிமுறையை அவர்கள் செயற்படுத்த வேண்டும். 

அத்துடன் வடமாகாண காணி ஆணையாளருக்கு இந்த காணி பிரச்சனையை தீர்ப்பதற்கான காணிக்கச்சேரியை நடாத்துவதற்கு தாங்கள் அதிகாரம் வழங்கியிருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அப்படி அதிகாரம் வழங்கியிருந்தால் வடமாகாண காணி ஆணையாளர் எமது மக்களின் பிரச்சனைகளை உண்மையில் தீர்த்திருக்க வேண்டும். காணிக்கச்சேரியை நடாத்தியிருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. 
குறிப்பாக வடகிழக்கில் தான் காணிபிரச்சனைகள் தீர்க்காமல் இருப்பதான குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்துள்ளார். உண்மையில் அது எமக்கு ஒரு தலைகுனிவுதான். 

இந்த நடமாடும் சேவை என்பது ஏமாற்றுகின்ற விடயமாகதான் இருக்கிறது. காணி பிரச்சனைகளை முழுமையாக காணி அமைச்சே கையாள வேண்டும். ஆகவே பிரதேச செயலகங்களில் மக்கள் சென்று களைப்படைந்த நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை எமது மக்கள் சந்தித்து பேசுவதென்பது தீர்வாகாது.நாம் இது தொடர்பில் அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம்.

அத்துடன் முல்லைத்தீவில் மகாவலி வலயம் என்றவகையில் காணிகளை அபகரிக்கும் சூழல் காணப்படுகின்றது. அந்த காணிகளை பெறுவதற்கான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் கூட இந்த நடமாடும் சேவைக்கு வந்திருக்கின்றார்கள் என்றார்.