அமெரிக்க பொருளாதார தடையால் சர்வதேச விண்வெளி நிலையம் கீழே விழப் போகுது என்று ரஷ்யா மிரட்டல்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் சர்வதேச விண்வெளி நிலையம் பாதிக்கப்படவுள்ளது. அது கடலிலோ அல்லது நிலத்திலோ விழுந்து சேதமடையப் போகிறது என்று ரஷ்யா எச்சரித்துள்ளது

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை இறங்கியுள்ளன. பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. பேஸ்புக், கோலா, பெப்சி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் ரஷ்யா மீது பல்வேறு வகையான தடைகளை விதித்து இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிரணியில் இணைந்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடையால் சர்வதேச விண்வெளி நிலையம் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளதாக ரஷ்ய விண்வெளிக் கழக தலைவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து விண்வெளிக் கழக தலைவர் டிமிட்ரி ரோகோஸின் கூறுகையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையால் சர்வதேச விண்வெளி மையம் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தடைகளை நீக்க இந்த நாடுகள் முன்வர வேண்டும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரிக்கத் தேவையான சாதனங்களை ரஷ்யாதான் கொடுக்கிறது. அவை தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது பாதிக்கப்பட்டால், 500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் கடலிலோ அல்லது நிலத்திலோ விழுந்து சேதமடையக் கூடும் என்று கூறியுள்ளார் டிமிட்ரி.

உக்ரைன் போர் தொடங்கியதுமே ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை அறிவித்தன. மேலும் உக்ரைனுக்கு ஆயுதம், பணம் உள்ளிட்டவற்றையும் கொடுத்து உதவி வருகின்றன. இருப்பினும் ரஷ்யா சற்றும் மனம் தளரவில்லை. அண்டை நாடான, இன்னொரு பொருளாதார வல்லரசான சீனாவின் உதவியுடன் இந்த தடைகளை சமாளித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை முன் வைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நெருக்க ஆரம்பித்திருக்கிறது ரஷ்யா. எங்களது வேலைகளை நிறுத்தி விட்டால் விண்வெளி நிலையம் அதோ கதிதான் என்று அது மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையம் என்னாகும், கீழே விழுமா அல்லது அமெரிக்கா ஏதாவது முயற்சி எடுத்து அதைக் காப்பாற்ற முயலுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் இணைந்துதான் சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரித்து வருகின்றன. ஒவ்வொரு நாடும் விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து வருகிறது. இதில் ரஷ்யா தனது வேலைகளை நிறுத்தப் போவதாக கூறியிருப்பது விண்வெளி நிலையத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.