அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பேசுவது என்பதே ஓர் அரசியல்தான்.

இந்த அடிப்படையில் பார்த்தால் நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை அதன் அரசியல் பரிமாணத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.அதற்கு நிரந்தரத் தீர்வை அரசியல் ரீதியாகத்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த அடிப்படையில்தான்இஅரசாங்கம் தேர்தல் காலங்களிலும்இ தேர்தல் வெற்றிகளுக்கு பின்னரும் நாட்டின் மக்களுக்கு வாக்குறுதி அளித்த எல்லாவற்ரிலிருந்தும் பின்வாங்கி வருகிறது.இந்த தலைகீழ் மாற்றங்களின் தொடக்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தமைதான். அரசுத்தலைவர் கோட்டாபய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு முன்னும் பின்னும் தன்னை மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் பணியாத ஒருவராகவே காட்டிக் கொண்டார். இந்தியாவுடன் செய்துகொண்ட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கான உடன்படிக்கையில் இருந்து பின்வாங்கினார். தன்னை தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஒருவர் என்றும் சிங்கள பௌத்தர்களின் தலைவன் என்றும் கூறிக் கொண்டார்.

ஆனால் வைரஸ் அவரைப் பணிய வைத்திருக்கிறது. வைரசின் விளைவாக மேலும் சரிந்த பொருளாதாரம் அவரைப் பணிய வைத்திருக்கிறது. இந்தப் பணிவின் தொடக்கம் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமிப்பது என்று முடிவெடுத்ததுதான். அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளை நிராகரித்த ஓர் அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவரை நிதியமைச்சராக நியமித்ததன்மூலம் அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் மாற்றத்தின் முதல் சமிக்கையைக் காட்டியது. அதிலிருந்து தொடங்கி பசில் ராஜபக்ச வெளியுறவு அணுகுமுறைகளில் உத்தி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்.ஜி எல் பீரிஸ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.மஹிந்த சமரசிங்க அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனம் துரிதமாக்கப்பட்டது. இவ்வாறாக வெளியுறவு அணுகுமுறை.மாற்றத்தை பிரதிபலிக்கும் நியமனங்கள் வேகமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அதோடு ஐநாவை நோக்கி அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியது. பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது இபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தொகுதிக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்இ பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு வடிவிலான ஒரு பொறி முறைக்கு தயாராக காணப்பட்டமைஇ ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்புக்களை அவற்றின் நலிந்த நிலையிலும் தொடர்ந்து பேணியமை. அக்கட்டமைப்புகளுக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமைஇ யாப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவை நியமித்தன்மைஇஇந்தியாவுடன் புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை போன்ற பல விடயங்களிலும் அரசாங்கம் வெளியுறவு உத்திகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக கிடைத்த வெளியாதரவுகளின் தொகுக்கப்பட்ட வெற்றிதான் வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். சில அரச பிரமுகர்கள் கூறுவது போல படையினரின் கையில் வைரசுக்கு எதிரான போர் கொடுக்கப்பட்டதால் கிடைத்த வெற்றி அது அல்ல. மாறாக வெளியுறவுப் பரப் ப்பில் அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வெளிநாடுகள் வழங்கிய உதவிகளின் திரட்டப்பட்ட விளைவே வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறாக வைரஸை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்திய அரசாங்கம் வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளிலிருந்து தப்ப முடியவில்லை. வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பசில் ராஜபக்ச வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தார்.எனினும் பொருளாதார நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை.

இலங்கைத் தீவின் பொருளாதாரம் மிகவும் சிறியது.பேரரசுகள் கை கொடுத்தால் அதை இலகுவாக நிமிர்த்தலாம். ஆனாலும் கடந்த சில மாதங்களாக பேரரசுகள் செய்த பெரும் உதவிகளால் இலங்கைத் தீவுக்கு மூச்சுவிடும் அவகாசம்தான் கிடைத்திருக்கிறதே தவிரஇபொருளாதாரம் நிமிரவில்லை.இதனால் பசில் ராஜபக்சவே அதிகம் விமர்சிக்கப்படுகிறார். அவரை பதவிக்கு கொண்டு வந்த பொழுது அவர் பல தலைகளைக் கொண்ட மந்திரவாதி போல கட்டப்பட்டார். அவர் ஒரு மந்திரவாதி அல்ல என்று எனது கட்டுரைகளில் ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேன். எந்தப் பெரிய மந்திரவாதி வந்தாலும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை நினைத்த மாத்திரத்தில் நிமிர்த்த முடியாது.பஸில் மட்டுமல்ல போதிசத்துவரே நிதியமைச்சராக நியமிக்கப்பட்டாலும் பொருளாதார விடயங்களில் மந்திர மாயங்களைச் செய்ய முடியாது.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தோல்விகள் யாவும் பசில் ராஜபக்ச என்ற தனிமனிதனின் தோல்விகளாக ஒரு பகுதி சிங்கள விமர்சகர்களால் காட்டப்படுகின்றன. ஆனால் இது பசில் ராஜபக்சவின் அல்லது அவரது சகோதரர்களின் தனிப்பட்ட தோல்வியல்ல.அவை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அரசியல் தோல்விகளிலிருந்து தொடங்குகின்றன. அதைவிட ஆழமான பொருளில் சொன்னால் தோல்விகள் யாவும் இனவாதத்திலிருந்து தொடங்குகின்றன.

இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.ஆனால் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் முடிவுகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடங்கும்.அதனால்தான் அரசாங்கம் கூட்டமைப்போடு பேச முன் வந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்கிறது.

அது காலத்தால் பிந்திய ஞானம். தவிர அரசாங்கத்தால் தன்னுடைய முன்னைய பிரகடனங்கள் இருந்து முற்றிலுமாக பின்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வை கொடுக்க முடியாது. அதுபோலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதிலும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காக புலம் பெயர்ந்தார்களோ அக்காரணம் நீக்கப்படாத ஓர் அரசியல் சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்யத் துணிய மாட்டார்கள்.

ஆனால்இசிங்கள மக்கள் தமது பொறுமையை இழந்து விட்டார்கள். எந்த ஒரு இரும்பு மனிதர் தமக்குத் தேவை என்று கூறி அமோகமான வெற்றியை கொடுத்து அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோஇ அவரை வீட்டுக்கு போ என்று கேட்டு அவருடைய தனிப்பட்ட வாசஸ்தலத்தை முற்றுகையிடும் ஒரு நிலை. இலங்கைத்தீவின் இதற்கு முன்னிருந்த எந்த ஒரு ஜனாதிபதிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்ததில்லை. இதற்கு முன்னிருந்த எந்த ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாசஸ்தலம் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் இவ்வாறு முற்றுகையிடப்பட்டதுமில்லை.

வெல்லக்கடினமான ஒரு யுத்தத்தை வென்று கொடுத்ததற்காக தாம் தலையில் வைத்துக் கொண்டாடிய ஒரு வெற்றி வீரரை ‘வீட்டுக்கு போ’ என்று சிங்கள மக்கள் கேட்கும் ஒரு நிலைமை. ஆனால் அவ்வளவு இலகுவாக அவர் வீட்டுக்குப் போகக் கூடியவர் அல்ல. அவரை அவ்வாறு வீட்டுக்கு அனுப்ப இப்போது எந்த எதிர்க்கட்சியாலும் முடியாது.

மனோ கணேசனின் வார்த்தைகளில் சொன்னால் அரசாங்கம் எப்பொழுதோ தோற்றுவிட்டது. ஆனால் அந்தத் தோல்வியை தம்முடையதாக சுவீகரித்துக் கொள்ள எதிர்க்கட்சிகளால் முடியாதிருக்கிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவு..மூன்று இனத்தவர்களின் வாக்குகளை கவர தேவையான ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.அதுதான் ராஜபக்சக்களின் பலம்.

இது ஆட்சி மாற்றத்தை விரும்பும் வெளித் தரப்புகளுக்கும் விளங்குகிறது. ராஜபக்சக்களை இலகுவாக வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பது அவர்களுக்குத் தெரிகிறது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ஆளை மாற்றி அதன் மூலம் நமக்கு அனுகூலமான ஓர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று சில நாடுகள் யோசிப்பதாக தகவல்கள் உண்டு. அந்த ஆள் பசில் ராஜபக்ச என்றுதான் பொதுவாக வெளிநாடுகள் நம்புவதாகவும் தகவல் உண்டு.

கடந்த வாரம் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பின்னணியில் பசில்தான் இருந்தார்.அவருடைய உழைப்பின் விளைவாகத்தான் அந்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன.அந்த உடன்படிக்கை களின்மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அச்சங்களை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணித்திருக்கிறது. இந்தியா இனப்பிரச்சினையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கையாள முடியாதபடிக்கு பசில் ராஜபக்ச இந்தியாவை திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஐநாவின் விடையத்திலும் அமெரிக்காவின் விடையத்திலும் அவர் அவ்வாறுதான் காய்களை நகர்த்தி வருகிறார். இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக வெளியுறவுப் பரப்பில் நாட்டை நோக்கி வந்த அழுத்தங்களை அவர் பெருமளவுக்கு குறைத்திருக்கிறார். ஆனால் நாட்டுக்குள் நிலைமைகள் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிகளை அடைந்துவிட்டன.

பசில் ராஜபக்சே முன்னெடுக்கும் ஆகிய அணுகுமுறைகளில் பொருளாதார விளைவுகளை நாடு அனுபவிப்பதற்கு காலம் எடுக்கும்.பொருளாதார மாற்றங்கள் மாயாஜாலக் கதைகளில் வருவது போல திடீரென்று நடக்கக் கூடியவை அல்ல. பொருளாதாரத்துக்கு அதற்கான விதிகள் உண்டு. அரசியல் பொருளாதாரம் அதன்படிதான் மாற்றங்களை அடையும். மந்திரத்தால் மாங்காய் பிடுங்க முடியாது. ஆனால் அதற்கிடையில் சிங்கள மக்களை சாந்தப்படுத்த ராஜபக்சக்களிடம் எதுவும் இல்லை. யுத்த வெற்றிதான் அவர்களுடைய பலம். அதுதான் அவர்களுடைய அரசியல் முதலீடு. யுத்த வெற்றி எனப்படுவது 2009க்குப் பிந்திய சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அப்டேட் செய்யப்பட்ட ஒரு வடிவம்தான்.

பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து தேர்தல் வெற்றிக்காக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் உள்நாட்டு மூலகங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தை அதன் முதற்கட்ட உச்சத்துக்குக் கொண்டு போனார். ராஜபக்ச குடும்பம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அதன் இரண்டாம்கட்ட உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது அந்த வெற்றி நாயகர்களை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. இது கார்ல் மார்க்ஸின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. ‘வரலாற்றில் சில சம்பவங்கள் இரண்டு தடவை நடக்கின்றன. முதல் தடவை அது அவலச்சுவை நாடகமாக முடியும். இரண்டாவது தடவை அது நகைச்சுவை நாடகமாக முடியும்’.

நிலாந்தன்