பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் அதற்கு வலுவாக முகம்கொடுக்க வேண்டுமெனவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கம் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் யோசனையொன்றை முன்மொழிந்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் அதனை வழிமொழிந்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.