மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படும். இது அரசமைப்பிலுள்ள ஏற்பாடு. அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு(வியாழக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அத்தியாவசியபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொருட்களின்  விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விரு காரணங்களே, மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை கோலோச்ச பிரதான காரணங்களாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்பின்னர் இடைக்கால அரசு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான யோசனையை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ  முன்வைத்து, அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கே மக்கள் ஆணை வழங்கினர். இடைக்கால அரசு அமைக்க அல்ல.”  என திஸ்ஸ குட்டியாராச்சி கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் பிரதமர் பதவி விவகாரமும் கூட்டத்தில் சூடுபிடித்துள்ளது. 

“ஆளுங்கட்சிக்குள் இருந்துகொண்டே டலஸ் அழகப்பெரும சூழ்ச்சி செய்கின்றார்.  பதவியை பெறுவதாக இருந்தால் நேர்வழியில் அதனை செய்ய வேண்டும். 113 இருந்தால் அதனை பெற்றுக்கொள்ளலாம்.” என டலஸ்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளை குட்டியாராச்சி தொடுத்துள்ளார்.

இதனால் டலஸ் அழகப்பெரும கடுப்பானார், 

“சந்திரிக்கா காலத்தில், மஹிந்தவை உயர் இடத்துக்கு கொண்டுவருவதற்கு நான்தான் போராடினேன். அப்போது ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் இருந்தவர்களும், அரசியலில் இல்லாதவர்களும்தான், ‘சூழ்ச்சி’ பற்றி கதைக்கின்றனர். நான் எதையும் வெளிப்படையாக பேசுபவன் – செய்பவன்.  புதிய அரசு அமைய வேண்டும் என்ற முடிவிலேயே இன்றும் இருக்கின்றேன். “ – என பதிலளித்துள்ளார்.

டலஸின் கருத்துக்கு ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் இடையூறு ஏற்படுத்த முற்பட்டவேளை, குறுக்கீடு  செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச,

“டலஸ் அழகப்பெருமவை எனக்கு நன்கு தெரியும். நான்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தேன். அவர் வெளிப்படையானவர். முதுகில் குத்தும் நபர் அல்லர்.” என்று  டலசுக்காக குரல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பின்வரிசை எம்.பிக்கள் அடங்கினர்.

அதன்பின்னர் பவித்ரா உட்பட மேலும் சில மொட்டு கட்சி எம்.பிக்கள் இடைக்கால அரசமைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இடைக்கால அரசு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே காரசாரமான வாக்குவாதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமரே நிலைமையை சமரசப்படுத்தியுள்ளார்.

இறுதியில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“பிரதமரை பதவி விலகுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை.  நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை (113)  இருந்தால் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.  அவ்வாறு இல்லாவிட்டால் 113 ஐ நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்படும்.” – என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக மஹிந்த ராஜபக்ச இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

அதேவேளை,  சர்வக்கட்சி அரசு தொடர்பில் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது புதிய பிரதமர் தொடர்பான பெயரை 11 கட்சிகளின் பிரதிநிதிகள் முன்மொழியவுள்ளனர். பெயர் பட்டியலில் டலஸ் அழகப்பெருமவின் பெயரே முன்னிலையில் இருப்பதாக தகவல்.

சர்வக்கட்சி அரசு தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பரீசிலித்துவருகின்றது. அவ்வாறானதொரு அரசு அமையும் பட்சத்தில் எத்தகையதொரு முடிவை எடுப்பது என்பது குறித்து அக்கட்சி அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் உயர்பீடம்கூடி முடிவொன்றை எடுக்கும். தற்போதைய அரசியல் நிலைமை குறித்து காங்கிரஸ் கழுகுப்பார்வை செலுத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஜனாதிபதி தலைமையில் அமையும் சர்வக்கட்சி அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகாமல் அமையும் எந்தவொரு கட்டமைப்பும் பயனற்றது என அக்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினது நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது. சர்வக்கட்சி அரசுக்கு தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி என்பனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்!

நம்பிக்கையில்லாப் பிரேரணை, இடைக்கால அரசு போன்ற யோசனைகளில் தான் கையொப்பமிடபோவதில்லை என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன், சபாநாயகரிடம் 7 யோசனைகள் அடங்கிய ஆவணமொன்றையும் அவர் நேற்று கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், வெற்றிடமாகும் பதவிக்கு பிரதம நீதியரசபை, 3 மாதங்களுக்கு பதில் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்பனவும் யோசனைத் திட்டத்தில் உள்ளடங்குகின்றன. இவை யோசனைகள் மாத்திரமே, அவற்றை செயல்படுத்துவதென்பது சவாலுக்குரிய விடயமாகும்.

ஆர்.சனத்