இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளார்.

இலங்கை நிட்டம்புவ பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் வாகனத்தையும் அவரையும் ஒரு கும்பல் தாக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகே உள்ள கட்டடத்துக்குள் தஞ்சம் அடைய அமரகீர்த்தி ஓடியதாகவும் அப்போது அவரை வன்முறை கும்பல் சூழ்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், சம்பவ பகுதியில் அமரகீர்த்தி அத்துகோரல சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரே தமது உயிரை துப்பாக்கியால் சுட்டு மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால், பிபிசி தமிழால் இந்த கூற்றை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.