கோட்டாபய ராஜபக்‌ஸ அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. இதனால், சர்வதேச உதவிகள் கிடைக்காது. அதனால் தான் கோட்டாப ராஜபக்‌ஷவின் கீழ் அரசாங்கத்தை உருவாக்க நாம் தயாரில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19.05.22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

இலங்கை இன்று முற்றாக சீரழிந்து விட்டது. இதனை நினைத்து நாம் மிகுந்த வேதனை அடைகிறோம். இரண்டு தரப்பினரும் இதற்காக வெட்கப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஸவின் தவறான தீர்மானங்களே இதற்கெல்லாம் காரணம். கோட்டாபயவே இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.

புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க ஐக்கிய மக்கள் சக்த்தி தயார். ஆனால் இன்று அமைந்துள்ளது புதிய அரசாங்கமல்ல. எனவே, நாட்டையே சீர்குலைத்த அரசாங்கத்துக்கு என்ன தண்டனை வழங்குவது ? இந்த ஆட்சியாளர்கள் இல்லாத புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்றார்.

20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகளிடம் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கடந்த கால வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளினாலேயே இது கொண்டுவரப்பட்டது. எதிர்கட்சிகள் இதன் ஒரு சரத்தைக்கூட காணவில்லை.

இதற்கு சபாநாயகரும் பொறுப்புக்கூறவேண்டும். யாரும் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரம் பார்த்து, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, திருட்டுத்தனமாக இதனை கொண்டுவந்தீர்கள். அலி சப்ரி போன்ற சிரேஷ்ட சட்டத்தரணி இவ்வாறானதொரு திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தமையிட்டு தாம் வெட்கமடைவதாக குறிப்பிட்டார்.