கொல்கத்தா தகுதி பெறுவதே சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி தொடங்கியதும் நிலை தலைகீழாக மாறியது. இங்கு நடைபெற்ற ஒம்பது ஆட்டங்களில் 2ல் மட்டுமே கொல்கத்தா தோல்விஅடைந்துள்ளது
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் சம பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்கு முன்பு 2 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 19ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஆட்டங்களில் அடிப்படையில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவிலும் அந்த அணி இரண்டாவது இடத்திலேயே தொடர்ந்தது.
அசுர வளர்ச்சியில் கொல்கத்த நைட்ரைடர்ஸ்
ஆனால், இந்தியாவில் நடைபெற்ற ஆட்டங்களின் புள்ளிப் பட்டியல் அடிப்படையில் கொல்கத்தா அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து. பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி பெறுவதே சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி தொடங்கியதும் நிலை தலைகீழாக மாறியது. இங்கு நடைபெற்ற ஒம்பது ஆட்டங்களில் 2ல் மட்டுமே கொல்கத்தா தோல்விஅடைந்துள்ளது (சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) .
கடைசியாக நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றியே பெற்றுள்ளது. இதேபோல், இறுதிப் போட்டிக்கு 2 முறை தகுதிப் பெற்ற கொல்கத்தா அணி 2முறையும் கோப்பையை வென்றுள்ளது. வெங்கடேஷ் அய்யர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, வருண் சக்கரவர்த்தி, லாக்கி பெர்கூசன், ஷிவம் மாவி, சுனில் நரைன் ஆகியோர் நல்ல ஃபார்பில் உள்ளனர். ஆந்த்ரே ரசல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அவரும் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமாகும்
இதையும் படிங்க: தோனி படைக்கு ‘ஷாக்’ கொடுக்கும் கொல்கத்தாவின் முடிவு
வேட்டைக்கு தயாராக இருக்கும் சென்னை
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி, தோல்வி மாறி மாறி பெற்றுள்ளது. எனினும், கொல்கத்தாவுக்கு எதிராக இந்த தொடரில் சென்னை சிறப்பாகவே விளையாடியுள்ளது. கொல்கத்தா-சென்னை அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டிலுமே சென்னைதான் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனின் சென்னை அணி சேசிங் செய்த ஆட்டங்களில் தோல்வி அடையவில்லை.
பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் வலுவாக உள்ளனர். இந்த ஜோடி நடப்பு ஐபிஎல் தொடரில் 1150 ரன்களை குவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றில் டெல்லி அணிக்கு எதிராக 63 ரன்கள் அடித்து தனது பழைய ஆட்டத்திறனை ராபின் உத்தப்பா நிரூப்பித்துள்ளார். இதேபோல், கேப்டன் தோனியும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ரவீந்தர ஜடேஜா,மொயின் அலி போன்ற ஆல் ரவுண்டர்கள் கூடுதல் பலம். எனினும், பந்து வீச்சில் சென்னை அணி பலவீனமாகவே உள்ளது. இந்த தொடரில் மூன்று முறை 180 ரன்களுக்கு மேல் குவித்தும், பந்து வீச்சு சரியாக இல்லாததால் சென்னை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நிச்சயமாக என் டி20 அணியில் அஸ்வினுக்கு இடமில்லை- வம்பிழுக்கும் மஞ்சுரேக்கர்
இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் 24 ரன்கள் எடுத்தால் நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த லோகேஷ் ராகுலின் (626 ரன்) சாதனையை முறியடித்து ஆரஞ்ச் தொப்பியை அவர் பெற முடியும். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பையை வென்றது. இதற்கு இன்றைய ஆட்டத்தின் மூலம் சென்னை அணி பழி தீர்க்கும் முனைப்பில் உள்ளது.
இதற்கு முன்பு 8முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 5 முறை கோப்பையை வென்று மும்பை அணி முதலிடத்தில் உள்ளது.