4 வயது சிறுமி வீட்டில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவி இருவரும் அந்த சிறுமியை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் அஜாக்கிரதையும், அலட்சியமுமே இந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். என்னதான் உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் தாய் – தந்தை ஆகிவிட மாட்டார்கள் என்ற உண்மையை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

குழந்தை இல்லா தம்பதியர்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு கெளரி என்ற மனைவியும், ஷிவானி என்ற 4 வயது மகளும் இருக்கிறார்கள். இவர்கள் மல்லிகா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இதனிடையே, ஹவுஸ் ஓனர் மல்லிகாவின் வீட்டுக்கு அவரது உறவினர்களான ராஜேஷ் குமாரும், கீர்த்திகாவும் வாரம் முறை வருவது வழக்கம். திண்டுக்கல்லை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.

சிறுமியை அழைத்து செல்ல விருப்பம்..

இதனால் மல்லிகாவின் வீட்டுக்கு வரும் போதெல்லாம், சிறுமி ஷிவானியிடம் இவர்கள் ஆசையாக பழகி வந்துள்ளனர். அவருக்கு சாக்லேட், பொம்மைகள் போன்றவற்றையும் அவர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் சிறுமி ஷிவானியும் அவர்களுடன் நன்றாக பழகிவிட்டாள். இதனிடையே, கடந்த திங்கள்கிழமை (அக்.31) மல்லிகாவின் வீட்டுக்கு வந்த ராஜேஷ் குமாரும், கீர்த்திகாவும் சிறுமி ஷிவானியை தங்கள் வீட்டில் ஒரு வாரம் வைத்திருக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை சிறுமியின் பெற்றோரான பிரகாஷிடமும், கெளரியிடமும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறும்புத்தனத்தால் எரிச்சல்..

முதலில் சிறுமியை அனுப்ப மறுப்பு தெரிவித்த அவர்கள், பின்னர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏதோ ஆசையாக கேட்பதாக எண்ணி சம்மதித்தனர். இதையடுத்து, ராஜேஷ் குமார் – கீர்த்திகா தம்பதியர் சிறுமி ஷிவானியை மகிழ்ச்சியாக தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்குச் சென்றதும் சிறுமி ஷிவானி குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனத்தை காட்ட ஆரம்பித்தாள். அங்குமிங்கும் ஓடுவது, பொம்மைகளுடன் விளையாடுவது என சிறுமி மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், சிறுமியின் சேட்டையை ஒரு கட்டத்துக்கு மேல் ராஜேஷ் குமார் – கீர்த்திகா தம்பதியரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்..

இதனால் சிறுமி ஷிவானியை அடிப்பது, உடலில் சூடு வைப்பது என அவர்கள் கொடுமை செய்ய ஆரம்பித்தனர். இதில் பயந்துபோன சிறுமிக்கு தனது பெற்றோரை தேட ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக, பெற்றோரை பார்க்க வேண்டும் எனக் கூறி சிறுமி தினமும் அழுது அடம்பிடித்தாள். அதற்காகவும் அந்தக் கொடூரத் தம்பதியர் அவளை அடித்து உதைத்தனர். இதனிடையே, கடந்த புதன்கிழமை அன்று தூக்கத்திலேயே சிறுமி ஷிவானி சிறுநீர் கழித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷும், கீரத்திகாவும் சிறுமியை சரமாரியாக அடித்தனர். இதில் தலை சுவரில் மோதி மூர்ச்சையாகி கீழே விழுந்தாள் சிறுமி ஷிவானி.

கொலை – கைது நடவடிக்கை

இதை பார்த்து பயந்த ராஜேஷ் – கீர்த்திகா தம்பதியர் சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி ஷிவானி நேற்று உயிரிழந்தார். இந்த சூழலில், சிறுமியின் உடலில் சூடு காயங்களை பார்த்த மருத்துவர்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தன்ர. இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், ராஜேஷ், கீர்த்திகாகவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தாங்கள் அடித்ததில்தான் சிறுமி மயக்கம் அடைந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பெற்றோரின் அலட்சியத்தாலும், ஈவு இரக்கமற்ற தம்பதியரின் கொடுமையாலும் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனதுதான் மிச்சம்.