வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கவே கூடாதென முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வரவு – செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்குக், கிழக்கு பிரிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பூகோளரீதியாக பலமான நாடாக மாற வேண்டும் ஏன்கிற இந்தியாவின் நோக்கத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். இதனாலேயே புலிகளை தோற்கடிக்க இந்திய அமைதிக்காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

எனினும் இதில் ஏற்பட்டத் தோல்விகளாலேயே இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது என்றார். வடக்குக், கிழக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்து அம்மாகாணங்கள் பிரிந்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருபோதும் அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. மாறாக கண்டிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தையே வழங்க வேண்டும். இதுவே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு எனவும் தெரிவித்தார்.